Monday, October 12, 2015

இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும் - III பிராமண நூல்களும் இறைச்சி உணவும்

இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும் - III

பிராமண நூல்களும் இறைச்சி உணவும்

இந்து இலக்கிய நூல்களின் வரிசையில் வேதங்களுக்கு அடுத்தபடியாக வருபவை பிராமண நூல்கள் ஆகும். இந்த வரிசையில் ஏராளமான நூல்கள் இருப்பினும் சதபத பிராமணம், ஐதரேய பிராமணம் போன்றவை பழமையானதும் மிக முக்கியமானவையும் ஆகும். இவை பெரும்பாலும் பலியிடுதல் சடங்குகள் மற்றும் அவற்றை நடத்த வேண்டிய முறை போன்றவற்றை விரித்துரைக்கும் விதமாக எழுதப்பட்டவை என்பதால் அவற்றில் இருந்து நாம் ஏராளமான தகவல்களைப் பெற முடிகிறது.

பலியிடுதல் சடங்குகளில் பலியிடப்பட்ட விலங்குகளைப் பற்றி பிராமண நூல்கள் தெளிவாக விளக்கி உள்ளன. புருஷமேதம், ராஜசூயம், வாஜபேயம், அஸ்வமேதம் என்று பல்வேறு பெயர்களில் நடத்தப்பட்ட பலியிடுதல் சடங்குகளில் நூற்றுக் கணக்கான பசுக்கள், எருமைகள், ஆடுகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட விலங்குகள் பலியிடப்பட்டன. விலங்குகளைப் பலியிடுதல்  இல்லை என்று சொன்னால் இது போன்ற சடங்குகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அது மட்டுமின்றி. இது போன்ற சடங்குகளுக்குப் பின்னர் பலியிடப் பட்ட விலங்குகளின் இறைச்சியை அந்தச் சடங்குகளை நடத்தியவர்கள் உணவாக உட்கொள்வதும் மிகவும் சாதாரணமான ஏற்றுக் கொள்ளக் கூடிய பழக்கமாக இருந்தது.

உதாரணமாக, எந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம் என்பதை சதபத பிராமணம் விரிவாகப் பட்டியல் இடுகிறது (சதபத பிராமணம் 3.2.1.12). அது மட்டுமின்றி, உணவுகளில் இறைச்சியே சிறந்தது என்றும் சதபத பிராமணம் சான்றிதழ் தருகிறது (சதபத பிராமணம் 11.7.1.3.9).

பிரம்ம தத்துவத்தை மிக விரிவாக எடுத்துரைத்த யாக்ஞவல்கியர் என்னும் முனிவர் தனக்கு பசுவின் இறைச்சி பிடிக்கும் என்றும் அதிலும் பசுவுடைய இளம் கன்றுவின் இறைச்சி மிகவும் பிடிக்கும் என்றும் கூறியதை சதபத பிராமணம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

பிராமண நூல்களின் காலத்திலேயே பசு இறைச்சியை உட்கொள்வதற்கு எதிரான கருத்துக்கள் தோன்றிவிட்டன என்பது உண்மை தான். அதற்கும் பிராமண நூல்களில் பல சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் பௌத்தம் மற்றும் சமண மதத்தின் தாக்கம் காரணமாகவே இத்தகைய நிலைப்பாட்டை பிராமண நூலாசிரியர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எப்படி இருப்பினும் கொல்லாமை என்னும் தத்துவத்தை புத்தன் மற்றும் மகாவீரர் ஆகிய இருவரிடம் இருந்து தான் இந்துமதம் பெரிதும் உள்வாங்கிக் கொண்டது என்பதும் அதற்கு முன்பு வரை அனைத்து உயிர்களையும் சடங்குகளின் பெயரால் கொன்றழிக்கும் விதமான முரட்டு நம்பிக்கைகளையே நாம் பின்பற்றி வந்தோம் என்பதும் உண்மை.

பசுவின் புனிதம் என்பது, புத்தனும் மகாவீரனும் அருளிய கொல்லாமை என்னும் தத்துவத்தைப் பசுவுக்கு மட்டுமே பொருத்தும் விதமாக புராண மதம் சார்ந்த நம்பிக்கை ஏற்படுத்திய திரிபு மட்டுமே தவிர வேறிற்லை.










Thursday, October 8, 2015

இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும் - II

வேதங்களில் இறைச்சி உணவுக்கான சான்றுகள்


இந்துக்களின் மிகப் புனித நூலாக முன்வைக்கப் படும் ரிக் வேதம் மேய்ச்சல் கால ஆரிய சமூகத்தையும் அக்கால மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக்காட்டுகிறது. எனவே அவர்களது வாழ்வில் கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை ஆக இருந்தன. பசுவைக் குறிக்கும் காவ் என்னும் சொல் ரிக் வேதத்தில் நூற்றுக்கணக்கான முறைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பசுக்களே ஆரம்பகால ரிக்வேத ஆரியர்களின் முக்கிய உடைமையாக இருந்தன. பசுவின் கன்றுகள் தாயிடம் ஓடிவரும் போது எழுப்பும் சப்தமே அவர்களின் காதுகளுக்கு மிக இனிமையானதாக இருந்தது.

ஆரிய இனக்குழுக்களின் தலைவர்கள் கோபதி என்று அழைக்கப்பட்டனர். ஆரிய சமூகத்திற்குப் பொதுவானதாக இருந்த கால்நடைகள் அடைக்கப்பட்ட இடம் கோத்ர என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தச் சொல் இரத்த உறவு உடைய உறவினர்களைக் குறிப்பதாக மாற்றம் பெற்றது. ஆரியர்கள் தங்களுக்குள்ளும் ஆரியர் அல்லாதவர்களுடனும் நடத்திய சண்டைகள் கவிஷ்தி அல்லது கால்நடை கவர்தலுக்காக நடத்தப்பட்ட மோதல் என்று கூறப்பட்டன.

இவ்வாறு பசுக்கள் அவர்களின் வாழ்வில் முக்கியமானதாக இருந்த போதிலும், அதனைக் கொல்வதும் அதன் மாமிசத்தை உண்பதும் மறுக்கப்பட்டதாக இருக்கவில்லை. பசுக்கள் மட்டுமின்றி இதர கால்நடைகளைக் கொல்வதும் அவற்றின் இறைச்சியை உண்பதும் மறுக்கப்பட்டதாக இருக்கவில்லை.


ரிக் வேதத்தில் ஆடு, எருது மற்றும் குதிரை உள்ளிட்ட விலங்குகள் வேதக் கடவுளர்களுக்கு உணவாகப் படைக்கப்பட்டது பற்றி ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன.

ஆரியர்களால் பெரிதும் போற்றப்பட்ட கடவுளான இந்திரன் காளையின் இறைச்சியை மிகவும் விரும்பி உண்டான் என்பதை ரிக் வேதம் பல முறை குறிப்பிடுகிறது (ரிக்வேதம் 10.86.13, 14). இந்திரனுக்காக நூறு எருமைகளை விஷ்ணு சமைத்துக் கொடுத்ததாக ஒரு ரிக்வேதப்பாடல் கூறுகிறது (ரிக்வேதம் 6.17.11) குதிரைகள், காளைகள், மலட்டுப் பசுக்கள் மற்றும் ஆடுகள் அக்கினியின் உணவாக இருந்தன என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் பலியிடுதல் சடங்குகளில் பலியாகத் தரப்பட்டன. இவ்வாறு பலியிடப்பட்ட விலங்குகளை உண்ணுவது பழக்கமான ஒன்றாக இருந்தது என்பதைப் பிற்கால ஆதாரங்கள் நிரூபித்துள்ளன. மக்கள் தாம் விரும்பும் உணவை, மிகச் சிறந்ததாகக் கருதுவதையே தனது கடவுளர்களுக்குப் படைப்பார்கள். விலக்கப்பட்ட உணவைத் தனது கடவுளர்களுக்குப் படைக்க மாட்டார்கள் என்பதால் படையல் பொருட்கள் நிச்சயமாக அவர்களது விருப்பத்தைப் பிரதிபலிப்பவையே ஆகும்.
  
எனவே, வேத காலத்தில் இறைச்சி உணவு பொதுவாக வழக்கத்தில் இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அது வெறுக்கவோ ஒதுக்கவோ படவில்லை என்பது உறுதியாகும்.

Tuesday, October 6, 2015

இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும்


இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும் - I

இறைச்சி உணவைக் குறிப்பாக மாட்டு இறைச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று இந்துத்வ வெறியர்கள் சில காலமாகக் கூப்பாடு போட்டு வருகிறார்கள். மும்பாய் உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக ஆட்சியாளர்கள் இதனைச் சட்டவழியில் நடைமுறைப்படுத்த முற்பட்டுள்ளனர். மாட்டு இறைச்சி என்பது இந்துக்கள் எப்போதுமே உட்கொள்ளாத மற்றும் ஒதுக்கப்பட்ட ஒன்றாகும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவது அவர்கள் நோக்கம் ஆகும்.

இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் மிகப் பெரும்பான்மை ஆனவர்கள் வேதங்கள் உள்ளிட்ட இந்து மதவியல் இலக்கியங்களைப் படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே இத்தகைய பிதற்றல்களை இவர்கள் இத்தனை நம்பிக்கையுடன் முன்வைப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

இதனைத் தாண்டி, இந்து மதவியல் இலக்கியங்களைப் படித்தால் வேத காலம் முதல் இறைச்சி உணவு உட்கொள்வது மிகச் சாதாரணமாக தினசரி நிகழ்வு ஆக இருந்தது என்பது மிகத் தெளிவாகும். இந்துக்களின் புனித நூல்களாகிய வேதங்கள், அதனை அடுத்து வந்த பிராமணங்கள், தத்துவப் பேழைகள் என்பதாக முன்னிறுத்தப் படும் உபநிடதங்கள் ஆகிய அனைத்தும் இதற்குப் போதும் என்று சொல்லும் அளவுக்குத் தேவையான சான்றுகளை முன்வைக்கின்றன.

ஆகவே இறைச்சி உணவை எதிர்க்கும் இந்துத்துவ வெறியர்களை அறிவுசார் அடிப்படையில் எதிர் கொள்ள வேண்டும் என்றால், இதனை நாம் மேலே சொன்னது போல வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது வெறும் நேர விரயமாக மட்டுமே இருக்க முடியும்.